DISPASSIONATED DJ

December 30, 2006

சே குவேரா

Filed under: திரைப்படம் — டிசே தமிழன் @ 3:16 pm

-El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-

சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, ‘சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின் தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்’ என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. கனடீய நெறியாள்கையாளரால் எடுக்கப்பட்ட El Che: Investigating a Legend என்ற இவ் ஆவணப்படும், சே குவேராவின் குறிப்புக்களினூடாக மட்டுமின்றி அவரை நேரடியாகப் பரீட்சயமானவர்களின் குரல்களினூடாகவும் சே என்ற ஆளுமையைப் பதிவு செய்கின்றது.

இவ் ஆவணப்படும், சே இறந்த 30 வருடங்களின் பின், பொலிவியா அரசாங்கமும் உண்மையை ஏதோ ஒருவகையில் ஒப்புக்கொண்டு சேயைக் கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சேயினது ஆரம்பக்குறிப்புக்களான மோட்டார் சைக்கிள் டயரிக்குறிப்புக்களிலிருந்து இப்படம் ஆரம்பித்தாலும் அந்தச் சம்பவங்களை விரைவாகக் கடந்து போகின்றது. ஏற்கனவே அந்தச் சம்பவங்கள் திரைப்படமாக்கப்பட்டதால் அப்படி நேர்ந்திருக்கலாம். சேயின் ஆளுமையில் அந்தப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், சே பிறகு குவாத்தாமலாவில் சந்திக்கும் அரசியல் ஆளுமை மிக்க பெருநாட்டு பெண்ணுடனான (Hilda) தொடர் விவாதங்களினூடாகத்தான் அவரின் அரசியல் சித்தாந்தப் பயணங்கள் தொடங்குகின்றது. மார்க்சின் மீதான பெருவிரும்பும், ஏகாதிபத்தியம் மீதான எதிர்ப்பும் அங்கேதான் சேயில் ஆரம்பிக்கின்றது. ஹில்டாவை சே திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கின்றது.

che

பிறகு முதலாவது கியூபாப் புரட்சி தோல்வியில் முடிவுற்று சிறையில் இரண்டு வருடங்கள் கழித்த பிடலை மெக்சிக்கோவில் சே சந்திக்கின்றார். அதன்பின்னர் கியூபாப் புரட்சி நடக்கின்றது. கியூபாப் புரட்சி மிகக்குறுகிய காலத்தில் நடந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த -எனக்கு- Sierra Maestra மலைப்பிரதேசத்தில் வருடக்கணக்கில் தங்கியிருந்து, தமக்கான ஆயுதங்கள், ஆட்சேர்ப்பு, வானொலி பிரச்சாரம் என்று நெடிய விடயங்களை கியூபாப் புரட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள் என்பது -என்னளவில்- ஆச்சர்யமாயிருந்தது. பிறகு காஸ்ரோவின் ஆணைப்படி, அவரது முக்கிய லெப்டினங்களான சேயும் இன்னொருவரும் வெவ்வேறு நகரங்களினூடாக ஹவானாவை அடைய முயற்சிக்கின்றனர். அங்கேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த -450 கிலோமீற்றர்கள் நடந்து- சான்ரா கிளாராவை சே தனது தோழர்களுடன் வந்து சேர்கின்றார். அந்தச் சமயத்தில்தான் ஆயுதத் தளபாடங்களுடன் வருகின்ற புகைவண்டியைத் தாக்கி கைப்பற்ற, மிக முக்கிய தளமான சான்ரா கிளாராவும் பின் வீழ்கின்றது. ஒரு வைத்தியரான சே, திறம்பட போராட்டத்தை நடத்தும் ஆயுதப்போராளியாக அதில் பரிணமிக்கின்றார்.

சேயின் ஆளுமையில் கறை என -ஒரு தனி மனிதரால் நினைக்கத்தோன்றும்- பஸ்டிட்டா ஆதரவாளர்களை கழுவிலேற்றும் பணி கியூபாப்புரட்சியின்பின் நிகழ்கின்றது. ‘புரட்சியின் பெயரால்..’ என்று காஸ்ரோவுடன் சேர்ந்து சேயும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதுகின்றார். காஸ்ரோவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக சே கியூபாவில் வளர்கின்றார். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்பே முக்கியம் என்பதிலும் அமெரிக்கா முதன்மையான எதிரி என்ற விவாதங்களிடையே சேயிற்கும் பிடலுக்கும் முரண்கள் எழுகின்றன. கியூபாவுடனான தங்கள் உறவு முறிந்ததற்கு பிடலை விட சே முக்கிய காரணமென அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றது. பொருளாதாரத் தடை, மற்றும் கியூபாவின் முக்கிய ஏற்றுமதியான கரும்பை வாங்குவதில்லையென அமெரிக்க முடிவெடுக்க, சோவியத் ஒன்றியம் கியூபாவின் புதிய அரசுக்கு கரும்பை தாங்களே இறக்குமதிசெய்து கைகொடுக்கின்றது. ஒரிடத்தில் கியூபாவில் நடந்தது என்ன என்று கேட்கப்படுகின்றபோது சே நகைச்சுவையாக so-CIA-list revolution என்று வார்த்தைகளைப் பிரித்துப் பதிலளிப்பார்.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்போதும் களத்தில் நின்று மக்களுடன் போராட வேண்டும் என்று கூறி பலவேறு வகையான வேலைகளை ஒரு சாதாரண குடிமகனாய் நின்று செய்து, இப்படி எல்லா அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று கூறவும் சே செய்கின்றார். தேசிய வங்கிகளின் தலைவராய் இருக்கும் சேயிடம் ஒரு அந்நிய நாட்டு நிருபர் are you an economist? என்று கேட்கும்போது no, i’m a communist என்று பதிலளிப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். எனினும் சேயினது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோற்றுப்போக, பிடல் தங்கள் நாட்டு புரட்சியின் தூதுவராய் பலவேறு உலகநாடுகளுக்கு சேயை அனுப்புகின்றார். அந்தச் சுற்றுப்பயணத்தில்தான் சே, குருசேவ்,மாவோ, ரிற்றோ, நாசர், நேரு போன்றவர்களைச் சந்திக்கின்றார். எனினும் திரும்பி வருகின்றபோது ஆபிரிக்காவில் நடக்கும், ஆபிரிக்கா-ஆசிய மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். கம்யூனிச நாடுகள் தங்கள் லாபநட்டங்களைப் பார்த்து மூன்றாம் உலகநாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கக்கூடாது; மேலும் அந்நாட்டுகளின் புரட்சியிற்கு தேவையான ஆயுதங்களையும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சோவியத் ஒன்றியத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், சோவியத் மீதான விமர்சனமாய் அது பலரால் பார்க்கப்படுகின்றது (இவ் ஆவணப்படுத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், சே பின்னாட்களில் ஆகர்சிக்கப்பட்ட சீன கம்யூனிசமே, சோவியத் எதிர்ப்புக்கும் பிடலோடான பிளவுகளுக்கும் ஏதோவொரு வகையில் காரணமானது என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது). அந்த எதிரொலி பிடல் சேயை விமான நிலையத்தில் சந்திக்கும்போது படம்பிடிக்கப்பட்ட முறையிலே தெளிவாகத் தெரிகின்றது. பயணத்தின் முடிவில் கிட்ட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் எந்த கமராவும் அனுமதிக்கப்படாமல் சேயிற்கும் பிடலுக்கும் இடையில் உரையாடல் மூடிய அறையினுள் நிகழ்கின்றது. அதன்பின்னராக சே யின் இருப்பு கியூபாவின் எந்த நிகழ்விலும் இல்லாமற்போகின்றது. இற்றைவரை பிடலுக்கும் சேயிற்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் இரகசியமாகவே இருக்கின்றது.

தொடர்ந்து சேயின் இருப்பு கியூபாவில் இல்லாததால் கியூப மக்களிடையே பலவேறு வதந்திகள் சேயைப் பற்றி பரவுகின்றது. ஒருகட்டத்தில், பிடல் உண்மையை உடைக்கின்றார். சேயின் முக்கியத்துவம் பெற்ற -பிடலுக்கான கடிதம்- பொது அரங்கில் வெளியிடப்படுகின்றது. தான் தனது எல்லாப் பதவிகளிலிருந்து விலகுகினறேன்; இனி கியூபவாசியாக தான் இருக்கப்போவதில்லையென்ற சேயின் சாட்சியம் வாசிக்கப்படுகின்றது. இதற்கு எப்படி சேயினது எதிர்வினை இருந்தது என்பதை அந்தக் காலத்தில் சேயுடன் கொங்கோவில் இருந்த ஒரு தோழரால் இப்படிக் கூறப்படுகின்றது: சே அந்தக் கடிதம் தனது இறப்பின் பின்னே வெளியிடப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட்டதை அறிந்தபோது சே கூறியது, ‘ஸ்ரானிலைப் போல இன்னும் பலர் தமது திருஉருவங்களை வளர்க்க பிரியப்படுகின்றார்கள் போலும்’ என்பது. இது பிடல் மீதான விமர்சனம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கோவில் சேயினது புரட்சியிற்கான திட்டங்கள் தோற்கின்றன. எனினும் சேயிற்கு தனது கடிதம் பிடலால் வாசிக்கப்பட்டதால் கியூபாவுக்கு வரவும் சங்கடமாயிருக்கின்றது. இறுதியில் சே அடுத்த திட்டத்திற்காய் பிடலிடம் வந்து சேர்கின்றார். அவரிடம் ஆளுமை மிக்க இருபது(?) கியூப வீரர்களை பிடல் ஒப்படைக்கின்றார். சே பொலிவியா போய்ச் சேருகின்றார். இலத்தீன் அமெரிக்கா முழுவதற்குமான கம்யூனிசப்புரட்சியென்ற தனது பெருங்கனவை விசாலிப்பதற்காய். எனினும் அவர் தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பிய பொலிவியா கம்யூனிசக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்காது கைவிடுகின்றது (அக்கட்சியில் சோவியத்து கேஜிபியின் ஊடுருவல் இருந்ததாய் எங்கையோ வாசித்ததாய் நினைவு). சேயினது உடனடித்திட்டம் பொலிவியாவில் இருக்கும் அரசின் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல; இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் புரட்சியிற்கான ஒரு பெரும் தளத்தை பொலிவியாவில் அமைப்பதே அவரது முதன்மையான நோக்கமாயிருந்தது. பொலிவியா ஜந்து இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கிடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் வியட்நாமிய போரும் தீவிரமடைகின்றது. ஒன்று… இரண்டு… பல நூற்றுக்கணக்கான வியட்நாம்களை…. நாம் உருவாக்கவேண்டும் என்று சே பேச்சொன்றில் குறிப்பிடுகின்றார். பல வியட்நாம்களை உருவாக்குவதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தவேண்டும் என்றவகையிலும் வாசித்துணரலாம்.

சே யினது தோழர்கள் கைப்பற்றப்பட, அவர்களின் உதவி மற்றும் ஆயிரக்கணக்கான பொலிவியா வீரர்களின் சுற்றிவளைப்பில் சே காயத்துடன் பிடிக்கப்படுகின்றார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இரவு சிறு பள்ளியொன்றில் தங்கவைக்கப்படும்போது மேலிடத்திலிருந்து விசாரிக்கும் பொலிவியா அதிகாரிக்கு தகவல் வருகின்றது, எந்த ஒரு சிறைக்கைதியும் உயிருடன் திருப்பிக் கொண்டுவரக்கூடாது என்று. சேயிற்கு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதற்கு முன் சிஜஏ அதிகாரியின் வரவு இருந்தது என்பதை பொலிவியா பொலிஸ் அதிகாரி ஆவணப்படத்தில் உறுதிப்படுத்துகின்றார். சேயின் இறுதிக்கணத்தை நேரடியாகப் பார்த்த பள்ளியாசிரியை ஒருவரும் அதில் உரையாடுகின்றார். பிறகு ஒரு பகலும் இரவும் சேயினது உடல் பொலிவியா மக்களுக்கு ஒரு ‘துரோகி’யைப் போல காட்சிக்கு -எந்த மரியாதையும் இல்லாது- வைக்கப்படுகின்றது. சேயினது உயிரற்ற உடலைப் பார்க்கும்போது கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததுமாதிரியான காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. விழிகள் மூடாது உதடுகளில் சிரிப்பு மலர்ந்தபடிதான்… இறந்தபின்னும் சே காட்சிதருகின்றார். அந்தக் கடைசிக்கணங்களைப் பார்க்கின்ற எவரும் சே இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி சே ‘உயிர்ப்புடன்’ இருப்பார்.

ஆவணப்படம் என்றாலே அலுப்பூட்டும் என்று தோன்றாவண்ணம் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது (அல்லது சேயின் மீதான ஈர்ப்பால் அலுப்புத் தெரியவில்லையோ தெரியாது). சேயினது பல நேரடி நிகழ்வுகள் அப்படியே பதிவாக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சே, நானொரு கவிதை சொல்லப்போகின்றேன் என்று சிறுவனைப் போல வெட்கமுறுவதும், பிறகு பயப்பிடவேண்டாம் இது எனது கவிதையல்ல என்று கூறியபடி கவிதையொன்றை வாசிப்பதும், சே தனது தகுதிகளை மறந்து சாதாரணமாய் இருக்க முயற்சித்திருக்கின்றார் என்பதைக் கவனிக்கலாம். சேயினது நெருங்கிய உறவுகள், முக்கிய தோழர்கள் -ஏன் பிடல் கூட சேயைப் பற்றி உரையாடுவது என- அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, ஏதோ சேயினது காலத்தில் நாமும் உலாவிவிட்டு வந்ததுமாதிரியான உணர்வினைத் தருகின்றது. சே தனது குழந்தைகள் மீது மிகப்பெரும் விருப்புடையவராக இருந்தார். அவரது இரண்டாவது திருமணத்தில் ஜந்து குழந்தைகள் அவருக்கு இருந்தார்கள். தனக்கு ஒன்பது குழந்தைகள் வேண்டும் அப்போதுதான் ஒரு பேஸ்போல் அணியை அமைக்கமுடியும் என்று தன்னிடம் நகைச்சுவையாக கூறுவார் என்று சேயினது துணைவியார் ஓரிடத்தில் நினைவுபடுத்தும் காட்சியும் உண்டு.

ஒரு கம்யூனிசப் புரட்சியாளன் எப்படி இருப்பான் என்பதை சே தன் வாழ்வினூடாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கின்றார். ஒரு புரட்சியாளன் வாழும்போது அல்ல; அவன் சாகும்போதுதான் உலக மக்களுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிச் செல்கின்றான் என்பது சேயினது இறப்பின் பின்பான அவரது பெரும் எழுச்சி நமக்குச் சாட்சியம் சொல்கின்றது.

(தோழிக்கு, for your birthday)

December 29, 2006

பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்….

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 11:55 am

‘”இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?” என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.’
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க….)

வெங்கட் சாமிநாதனின் முன்னுரையை வாசித்தபோது ‘அடியேனையும்’ இந்த முன்னுரையில் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம்வர ப்ளாஷ்பாக்கை சுழலவிட்டேன் (எனது கட்டுரையைக் கீழே தந்திருக்கின்றேன்). 2004ல் இயல்விருதுக்காய் வெ. சா ரொரண்டோ வந்தசமயம், இதுவரை ஈழத்தமிழ் படைப்புக்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்ற கேள்வியை நான் நேரடியாக கேட்டதாய் நினைவினில்லை. ‘அணங்கு’ நிகழ்வு பற்றித்தான் ஒரேயொரு கேள்வியை அவரிடம் நேரடியாக கேட்டிருக்கின்றேன். மேலும் தளம்பாத நிறைகுடம் என்று வெ.சாவினால் விபரிக்கப்பட்ட நண்பர்தான், ‘நீர் கேட்ட கேள்வி நியாயந்தான் இன்னும் விரிவாக கேட்கவேண்டும்’ என்று கேள்விகளின் பின்பான நேரத்தில் -இன்னும் கேளும் என்று- உசுப்பிவிட முயன்றவர். எனினும் உந்த உசுப்பலுக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன் என்று வாங்கவேண்டிய புத்தகங்களைத் தேடியெடுக்கப் போய்விட்டேன் என்பது வேறுவிடயம்.

அந்தக் கூட்டத்திற்கு போனபோது வெ.சா, பா.அகிலன், சனாதனன், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் படைப்புக்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றார் என்ற புரிதலோடே சென்றிருந்தேன். எனது ஆதங்கம், அவருக்குப் பரீட்சயமான ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து அந்தக்கூட்டத்தில் பேசவில்லை என்பதாக இருந்தது என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.

‘நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு, புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் ‘கருஞ்சுழி’ எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).’

என்று வேறொரு வாசிப்பை முன்வைத்துக் கூறியதை இதுதான் சந்தர்ப்பம் என்று -வெ.சாவின் ‘சாதிப்பின்புலமும் காரணமாயிருக்கலாம்’ என்ற ஒற்றை வசனத்தை வைத்து- ஜெயமோகனும் என்னை வெருட்டும் ஆட்டத்தில் களமிறங்கியிருந்தார் (பிறகு விவாதம் வேறு திசையில் சென்றததால் அந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு நான் மன்னிப்பு கேட்டு நீக்கவும் செய்திருந்ததாயும் நினைவு). ஆனால் இற்றளவும் வெ.சாமிநாதன் தனது சாதி அடையாளங்களை மறந்து/மறுத்து வந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இங்கே வரும் ‘விளம்பரம்’ என்ற சஞ்சிகையில் வெ.சா அவ்வப்போது பத்திகள் எழுதி வருகின்றவர். சில மாதங்களுக்கு முன் தலித் இயக்கங்கள், திருமாவளவன், கிருஸ்ணசாமி போன்றோரை ‘வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ தனது உயர்சாதி விமர்சனப்பார்வையால் நுட்பமாய் கீழ்நிலைக்கு தள்ளியிருந்தவர். மேலே தரப்பட்ட கட்டுரையில் கூட ஈழம் போன பெரியாரைப் பற்றிய வெ.சாவின் குறிப்புக்களிருந்து அந்த ஆதிக்கப்பார்வையை அறிந்துகொள்ளலாம். இன்னவும் பெரியார் விவாதித்த பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற வித்தியாசத்தைக் கூட பிரித்துபார்க்கமுடியாமல் ஏதோ எல்லா பார்ப்பனர்களையும் பெரியார் நிராகரித்தார் என்று குழந்தை போல கூறிக்கொண்டிருப்பது வெ.சா நெருங்கி நிற்கும் அரசியல் புள்ளியை அறிந்துகொள்ள இன்னும் உதவும். ஈழத்திலிருந்து வரும் எவரும் பெரியாரின் பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற உரையாடலை வெள்ளாளன்/ வெள்ளாள ஆதிக்கம் என்ற புள்ளிகளில் இணைத்து பார்க்க முடியும், ஒரு அமெரிக்க கறுப்பினத்தவனின் வாழ்க்கையை தலித் தன் வாழ்க்கையோடு ஒத்திசையச் செய்வது மாதிரி. மேலும் புலம்பெயர்ந்தவர்கள் பாஸிசக் கரங்களுக்கு எதிராக எழுதுகின்றார்கள் என்று கூறுகின்ற வெ.சாவிற்கு தமிழ்நாட்டின் தலித் எழுத்துக்கள் என்னவாய் தெரிகின்றதாம்? அவரது கண்களுக்கு சினிமா வெறி கவிதைகள் மட்டுமே தெரிகின்றது. அதிகார மையங்கள் சாதி ஒடுக்குமுறையாளர்கள் போன்ற பாஸிசக்கரங்களுக்கு எதிராய் தமிழகத்து தலித்துக்கள், இடதுசாரிகள் நிறையவே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெ.சாவிற்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது. ஆகக்குறைந்து இதைப் பிரசுரித்த ‘முன்னாள் இடதுசாரிகளான’ திண்ணை ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்தவர்களாவது வெ.சாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கலாம்.

வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் அதுகுறித்து சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், எனது அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் பதிவுசெய்துவிடுகின்றேன்.

வெ.சாவை முன்வைத்து நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிய இந்தப்ப்க்கத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!
~ டிசே தமிழன்
-

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? ) ஒவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சாமியும்.

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிப்பேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் ‘கருஞ்சுழி’ எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனும், மு.ராமசாமியைப் பற்றி ‘உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).

தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, ‘நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை’ என்பதை வெ.சாமி சமார்த்தியமாய்த் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து ‘இலக்கிய ஜம்பவான்களின்’ திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் ‘ரத்த உறவை’ எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுதுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே அனைத்தும் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல.

இபபடி இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடு வந்துசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

(http://www.geotamil.com/pathivukal/djtonvenkatsaminathan_june2004.html)

எதிர்வினை!
வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு…!

- ஜெயமோகன் -

எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எதிரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா ‘உள்வட்ட சித்தாந்தம்’ ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே ‘மக்கள் இலக்கியம்’ என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வர்க்க சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டார்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது.

(http://www.geotamil.com/pathivukal/jeyamoganondj2.html)

December 27, 2006

மரணதண்டனை வேண்டாம்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:57 am

-கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி -

அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை, வேலூர் - 2

அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

தொடர்ந்து வாசிக்க…..

(நன்றி: விழிப்புணர்வு)

December 25, 2006

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 1:22 am

‘உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.’
(ரமேஷ்:பிரேமின் ‘பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை’)

உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு சிக்கல்களும் வலிகளும் குழைந்தும் அவை குறித்து பேச முடியும். ஏதாவது ஒரு பூர்வீக நிலப்பரப்பின் பின்னணியில் பிறக்கின்ற மனிதனுக்கு அவன் விரும்பியோ விரும்பாலோ உறவுகள் என்று பெயரிடப்பட்டு பல இழைகள் பிறந்தவுடனேயே பிணைக்கப்பட்டு விடுகின்றன. அடையாள மறுத்தலைப் போல பிறப்பால் வருகின்ற உறவுகளை வெட்டிச் சிதைத்துக்கொண்டு போகமுடியுமெனினும், புதிதாய் மலரும் உறவுகளுக்கு அவனவன்களும், அவளவள்களும் மட்டுமே பொறுப்பாக முடிகின்றது. அவற்றை வளர்ப்பதும் சிதைப்பதும் அவரவர்களுக்கான உள்ளங்கைகளுக்குள் ஒரு பூவைப்போல பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தினுள் புதைந்துகிடக்கின்றது.

இவ்வாறான ஒரு மார்கழிப்பொழுதில் குளிர் உதைத்து தன்னை வின்ரர் வெளியில் துரத்தப்போகின்றதா, இல்லை ஊர் ஞாபகம் வந்து தன்னைச் சிதைக்கப்போகின்றதா என்று யோசித்தபடி தாரகைகள் இல்லா அடர்கருவானத்தை அவன் பார்த்தபடியிருக்கின்றான். நல்ல நண்பர்கள் என்றைய பொழுதும் தன்னை விட்டு நீங்காதிருப்பார்கள் என்ற நம்பிக்கை இவன் வசத்து நிறையவே உண்டு. நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பிறகு ஏதோ ஒரு புள்ளியில் முகஞ்சுழித்துப் போகின்றவர்களும் இவனுக்கு வாய்க்காமலில்லை. அவர்களில் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி தொடர்ந்து காயங்களை உண்டாக்கியபடி தம் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள். நீங்கள் என்னை நோக்கி முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் இன்னும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைப்பேன் என்றபடி அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியப்படுத்துவதுதான் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய வழியென்று நினைப்பவன் இவன். மேலும் இவனுக்கு முரண்பாடாய்/அசூசையாய் தெரியும் அவர்களின் புள்ளிகள் அவர்களுக்கான அளவில் நேர்மையாக/ஓர்மமாக இருக்கலாம் என்ற புரிதலும் உண்டு. தம்மோடு ஒத்த புள்ளிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதற்காய் அவர்களில் கோளாறு என்று முடிவுசெய்தலும் தவறு. உனதும் எனது புள்ளிகள் என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கையில் கைகுலுக்கி அறிமுகங்கள் செய்துகொள்வோம் என்று கூறி கைகுலுக்கி விடைபெறும் நேர்மையான சந்தர்ப்பங்கள் இவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதும் சோகமான விடயமே. அவ்வாறு மனம் மலர்ந்து பிரியாவிடை கொடுத்திருப்பின் எவரையும்/எதனையும் நினைத்து காலகாலங்களில் சோகித்திருக்கத் தேவையும் இருக்காதில்லையா?

ஒரு நாள் அவள் அவனின் எழுத்தின் தடங்களைப் பின்பற்றியபடி வந்து சேர்ந்தாள். எப்போதும் தனது எழுத்துக்களினூடாக தன்னை வந்தடையும் பாதைகளை சாமர்த்தியமாய் கலைத்தபடி இருப்பவனுக்கு அவள் அவனது இருப்பிடத்தை வந்தடைந்தது வியப்பாயிருந்தது. அறிமுகபடுத்திக்கொண்டாள். வந்தவளுக்கு தேநீரும் இனிய சொற்களும் கொடுத்து வரவேற்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தையே மறந்து போயிருந்தான் (அல்லது அப்படிக் காட்டிக்கொண்டான்). என்ன வேண்டும் என்ற ஒரு அதிகார மையத்தின் முதற்கேள்வியைப் போல அவன் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டான். என்னைச் சமதையாக வைத்து உரையாட முடியுமெனில் உரையாடு இல்லையெனில் திரும்பிப் போகின்றேன் என்றாள் அவள். இப்போது அண்மையாக எழுதிய என் எழுத்துக்களினூடாக வந்த நீ, திரும்பிப் போவதற்குள் நீ வந்த பாதையைக் கலைத்துபோட்டு இன்னொரு எழுத்தை எழுதினால் எப்படித் திரும்பிப்போவாய் என்று அவளை வளைத்துவிட்ட பெருமிதத்தோடு கேட்கின்றான் இவன் (அந்தச் சமயத்தில் சுருள் சுருளாய் இவன் புகைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்). திரும்பி வந்த இடத்தைப் போய்ச்சேருவது மிக இலகுவானது ஏனெனில் உனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முடிவடையும் புள்ளி ஒரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்த்து உள்ளுக்குள் மறுகிக்கொண்டிருப்பது…. எனவே நீ புதிதாய் எழுதும் ஒரு படைப்பினூடாகவும் நான் எனது வழியை எளிதாய் கண்டுபிடித்துத் திரும்பிப்போயிவிடுவேன் என்கிறாள் அவள்.

இப்படித்தான்…. சிக்கலான ஒரு தேற்றத்தை பரீட்சைநேரம் முடிவதற்குள் நிறுவிவிட முடியாத பதட்டத்துடன்தான் அவன் ஒவ்வொருமுறையும் அவளுடனான உரையாடல்களில் தோற்றுக்கொண்டேயிருந்தான். தனது வாழ்க்கையை தனது தனிமையாலும், விரும்பிக்கற்றுக்கொண்ட கணித எண்களாலுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவன் அவன். எல்லோரைப்போல மையநீரோட்டத்தில் வாழ விரும்பம் எனினும் தனது கடந்தகாலப் பயங்களும் எதிர்கால அச்சங்களுமே தன்னை இப்படியான எண்களால் கட்டியமைக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைத்தது என்று பொழுதுபோகாத நேரமொன்றில் பொழிந்துகொண்டிருந்த ஸ்நோவில் நனைந்தபடி கூறிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் முடிந்த மறுமுனையில் அவள் நின்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அவன் அவளது பெயரை தன்னையறியாது பனியில் கிறுக்கிக்கொண்டிருந்தபோது தானும் அவனது பெயரை மணலில் எழுதிக்கொண்டிருந்தேன் என்றபடி சிரிததபடி வருகின்றாள் அவள் மீண்டும்.

அவள் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தாள். தனக்கான பயங்களை, தனது தாய்நிலம் சூறையிடப்படும் அவல நிலையை, எதிர்கால இலட்சியங்கள் பற்றி இன்னவும் பிறவுமாய். அவள் நேசித்த ரஷ்ய படைப்பிலக்கியங்களையும், பயணம் செய்யும் விரும்பும் ஆபிரிக்கா வனாந்தரங்களையும் அறிய அறிய, அவன் இப்போதைக்கு உடையாது எனத்திடமாய் நம்பிய அவனது பாதுகாப்பு அரண்கள் உருகத் தொடங்கின. என்றாலும் இவன் சளைத்தானில்லை, வார்த்தைகளை கொண்டு விமர்சனக்கத்திகள் ஆயிரமாயிரம் செய்து போரிடும் சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்பதால் அவளை வலிக்கச் செய்யக்கூடிய இடங்கள் பார்த்து விமர்சனக்கணைகளை எண்ணற்று எய்யத் தொடங்கினான். அவள் பரிவுடன் வருபவளுக்கு கருணை பொங்கும் அன்னை மேரி; போரென்று வந்துவிட்டால் கண்ணீரைப் புதைதோண்டிப் புதைத்துவிட்டு விழிகள் சிவக்கும் உக்கிரமான காளி என்பது அவனுக்கு முன்னரே தெரியாமற்போய்விட்டது. (மணிமேகலையைத்தான் காளியாய் பிற்காலத்தில் ‘இந்து’சமயம் ஆக்கிவிட்டது என்ற ஒரு ஆய்வுக்குறிப்பையும் கூடவே சேர்த்துக்கொள்ளவேண்டும்). இவ்விடத்தில் பிறழ்வாய் இருக்கக்கூடுமெனினும், அவள் ஆடிய உக்கிரமான ஆட்டந்தான் இவனின் அனைத்துக் கர்வங்களையும் துடைத்தெறிந்து அவளிடம் நேசம் வைக்கச் செய்தது என்பதுவும் உணமையுமாகும்.

எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு எப்படிப்பட்டது என்பதை அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான். தனக்கென்று எதையுமே அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருப்பவள்; எப்போதாவது அன்பளிப்பாய் கொடுக்கும் நாலைந்து புத்தகங்களைத் தவிர பெறுமதியான எதையும் அவள் இற்றைவரையும் ஏற்றுக்கொண்டதுமில்லை. தனக்காய் சிறிது நேரத்தையும் நேசத்தையும் தந்துவிட்டு நீ எதையும் எவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற மிகப்பெரும் சுதந்திரவெளியை வழங்கிக்கொண்டிருப்பவள். இவை அனைத்தையும் விட தன்னைப் புத்தகங்கள் மட்டுமே நேசிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவன் மீது தனக்கு பிரியமுள்ளதென்று அவளே தயக்கமேதுமின்றி வந்து முதலில் நேசத்தை வெளிப்படுத்தியதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் தன்னை நேசிக்கின்றாள் என்பது புரியவே இவனுக்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கு இவன் நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருந்தததைத் தவிர வேறு எதுவும் காரணங்களாகிவிடாது.

நேசம் அரும்பிய ஆரம்பப்பொழுதில் திருமணம், இன்னபிற அடையாளங்களுடன் வாழுதல் தன்னால் சாத்தியமில்லை என்று முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் நீளநீளமாய் அமைத்தபோது, - கூறி முடித்துவிட்டாயா என்று பொறுமையுடன் காத்திருந்துவிட்டு-இப்படித்தான் எல்லா முற்போக்காளர்களும் கூறிக்கொண்டிருப்பார்கள், பிறகு அவர்களின் அனைத்து வண்டவாளங்களும் தெரியும் என்றாள். இதற்குப் பிறகும் இவை குறித்து அவனால் வாய் திறந்து பேசமுடியுமா என்ன? இதைவிட தனது அடையாளங்களை தொடர்ந்து மறுதலித்துக்கொண்டே வருபவள் என்றபடியால், கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் திலகமிடுதலிருந்து நகைகள் அணிவது வரை புறக்கணித்துக்கொண்டே இருப்பவள் அவள். பட்டுப்புடவை சரசரக்க கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் மினுங்க ஒரு ‘தமிழ்’ப்பெண்ணை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவனின் கனவை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றேனோ என்ற கவலை அவளுக்கு உண்டு போலும். எனினும், ‘ஏனெனில் நானொரு அரசிளங்குமரி/எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை/இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ/அதை மட்டுமே நான் அணிவேன்’ என்று இண்டியா அரி பாடுவதுபோல வாழவும் விரும்பும் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எளிய புரிதல் இவனுக்கும் உண்டு. நீ இன்று வெறுத்தொதுக்கும் ஆபரணங்களை, நாளை நீ அணிய விரும்புகின்றாய் என்றாலும் அதனூடாக நான் உன்னை அணுகப்போவதில்லை. அதற்கும் உனக்கான் என் பிரியங்களுக்கும் எந்தச் சமன்பாடுகளும் காலத்தின் எந்தப்புள்ளியிலும் வரப்போவதில்லை என்று மட்டுமே விளம்பமுடிகிறது இவனால்.

பின்னான காலங்களில் இவன் பலவற்றை அறிந்துகொண்டான். எழுத்துக்களினூடாகவும் வாசிப்பினூடாகவும் ஒருவரை இன்னொருவர் அறிந்துகொள்வது என்பது சுவாரசியமானது. எழுதுபவர்களின் வாசிப்பவர்களின் வாழ்க்கை அப்படி வியந்து சொல்லக்கூடியதாக அல்ல என்று கடந்தகால வரலாறுகள் வெள்ளிடைமலையென காட்டிக்கொண்டிருந்தாலும் அப்படியிருப்பது இருவருக்கும் பிடித்துக்கொண்டது. கணணித் திரையில் ஒரு அஞ்சலை அனுப்பிவிட்டு அது பெறுநரைப் போய்ச்சேரும் நேரத்தைவிட, உறவு ஒன்று சிதைந்துபோவதற்கான கால அவகாசம் குறைவானதே என்ற அச்சமிருந்தாலும்…. அவள் மீதான இந்தக்கணத்து நேசம் என்பது உண்மையானதும் எதிர்ப்பார்ப்புக்களின் அப்பாற்ப்பட்டதும் கூட.

‘நேற்று இல்லாத மாற்றம் என்னது/ காற்று என் காதில் ஏதோ சொன்னது?’ என்று அவள் அவனையறிந்த ஒருவருடத்திற்கும் பின்பான பொழுதொன்றில் பாடுகின்றாள். அதுவரை பாடவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தவள் அன்றைய பொழுதில் இன்னும் பல பாடல்களைக் காற்றில் கரைக்கின்றாள். இராகத்துக்கும் தாளத்திற்கும் பல்லவிக்கும் சரணத்திற்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் முறையிலா உறவிருக்கிறது என்று மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றவனுக்கும் அவள் பாடுவது பிடித்துத்தான் போகின்றது. இதைவிட தனக்கு மிக நெருக்கமாயிருப்பவள் தன்னைவிட தீவிர வாசிப்பும், ஆளுமைமிக்க எழுத்துத்திறனும் கொண்டிருப்பதும் அவனுக்கு மகிழ்வைத் தருகின்றது. தனக்குப் பிடித்த கவிதையொன்றை எழுதும்போது தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று தீர்க்கமான நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்தக் கடைசி கவிதையில் அவள் இருப்பதுதான் அவள் தந்துகொண்டிருக்கும் அற்புதமான தருணங்களுக்கு அவன் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

December 20, 2006

கியூபா - 02

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 2:14 pm

-என்னைப் போலவே கியூபாவின் மீது காதல் கொண்ட ஈழநாதனுக்காய்-

படங்கள் மங்கலாய் இருப்பதற்கு கமராவின் குறைந்த ஒளியல்ல காரணம்; மப்பே முக்கிய காரணம்.

PC120024

PC170061

IMG_6253

PC170070

PC180123

PC160058

PC170058

PC170057

IMG_6223

மேலேயுள்ளவை…இரவுகளில் மேடையரங்கு, நீர் நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்கள். இறுதிப்படத்தில் இருப்பவர், கியூபாவில் சந்தித்த ஒரு ஸ்பானியத் தோழி. பலவேறு வகையான நடனங்கள் நன்றாக ஆடக்கூடியவர், மிகுந்த நட்புணர்வுடன் எங்களுடன் பழகியவர். சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது.

December 18, 2006

கியூபா

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 5:06 pm

‘சே’ நேசித்த….,
‘சே’ நேசிக்கவும், கொண்டாட்டப்படும்…..
தேசத்தில் இருந்து சில பதிவுகள்!

PC190036

PC190011

PC190068

PC190073

PC190024

PC190035

PC190004

December 9, 2006

சு.வில்வரத்தினம் காலமானார்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 11:53 am

suVa
(1950-20006)

ஈழத்தின் முக்கிய படைப்பாளியான சு.வி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் கொழும்பில் காலமானார் என்ற மின்னஞ்சல் பத்மநாப ஜயரிடமிருந்து இன்று காலை வந்திருந்தது. ஏ.ஜே.கனகரட்ன, சு.வில்வரத்தினம் என்று ஈழத்தில் இருக்கும் படைப்பாளிகளை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகவும் துயரமானது.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)

பதின்மங்களில் ‘காற்றுவழிக்கிராமத்தை’ வாசித்தபோது மிகவும் பாதித்தது. ஊரூராய் அகதியாய் அலைந்து கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இழந்துவந்த மண்ணின் துயரை மனமெங்கும் படியவிட்ட கவிதைகள் அதில் நிறைய இருந்தன. அதன் பாதிப்பில் ரியூசன் வகுப்புக்குப் போன ஆங்கில ஆசிரியரிடமும் ஆங்கிலத்தில் ஒரு கவிதையைக் மொழிபெயர்த்து தரக்கேட்டதாயும் நினைவு.

உயிர்த்தெழும் காலத்துக்காக’ தொகுப்பில் - இதுவரை வந்த தொகுப்புகளின் அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கி வேறு புதிதாய் எழுதப்பட்ட கவிதைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றேன். நூலகத்திற்கு சென்று இவரது தொகுப்புக்களை வாசிக்க முடியும். அண்மையில் வெளிவந்த ‘காலம்’ இதழ் -27ல் ஜெயமோகன் சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து தனது விமர்சனப்பார்வையை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கின்றார்.

………………………………………………………………………..
Dear friends,

A sad news.

Su. Vilvaratnam passed away today 5pm at Delmon Hospital Colombo.
He was suffering from kidney failure and liver problem.
Contact Mu ponnambalam 0115518464.

Nuhman
(….added later…..Thanx to Pathmanaba Iyer)
…………………………………………………………………………

December 6, 2006

புத்தகங்களுடனான சிநேகம்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 1:45 am

‘ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்… விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து விடுபட பல வாரங்களாயின), ஒஸ்கர் வைல்ட், தோமஸ் போர்கே (இவரது சிறுகதைகள் மட்டும்தான் வாசித்திருக்கிறேன்), ஹெர்மன் ஹெஸ்ஸே (இவரது சித்தார்த்தா பலவிதத்திலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய நாவல்), சினுவா ஆச்சிபி (சிதைவுகள்), சில இந்திய எழுத்தாளர்கள்.. தமிழ்மொழியல்லாதோர்.. (பெயர்கள் நினைவிலில்லை - சம்ஸ்காரா, நிழல்கோடுகள் என நாவல்கள் மட்டும் நினைவிருக்கின்றன). …’
(நண்பரொருவரின் கடிதத்திலிருந்து….)வீட்டில் அவ்வப்போது குடும்பத்தினரால் பொது அறிவு காணாது என்று நற்சான்றிதழ் பாத்திரம் பெற்றுக்கொண்டிருக்கின்றவன் நான். வலைப்பதிவிலாவது இந்தப் பலவீனத்தை மறைத்து கொஞ்சம் ‘அறிவாளி’ மாதிரி உரையாடலாம் என்ற ஆசையை அவ்வப்போது ‘உனக்கெல்லாம் அரசியல் தெரியுமா?’ என்று கேட்டு பலர் -’என்னை வளரவிடாது’ - காலை வாரிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவு வளரவேண்டும் என்றால் என்ன செய்வது? புத்தகங்களைத் தான் நிரம்ப வாசிக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன், ஒரு அன்பர் திட்டோ திட்டென்று திட்டி -முடிவுறாத அனுமான் வாலாய்- பதிவொன்றை எழுதியிருந்தார். கூட்டத்தோடு கோவிந்தா பாடுவோம் என்று இன்னொரு நலன்விரும்பி பழைய கறளெல்லாம் சேர்த்து வைத்து வசைக் கவிதையை உடைப்புச்செய்து கூடவே எழுதியிருந்தார். அம்மா வளர்கின்றேன் என்று விளம்பரம் ஒன்றில் காட்டப்படுவதுபோல குட்டு விழுவதில் ‘சந்தோசம்’ என்பதைவிட, ‘உங்களின் வட்டத்திற்குள் நானில்லை’ என்பதே அந்தப்பொழுதுகளில் எனக்கு நிறைவாயிருந்தது.

வசைக் கவிதையில் நலன்விரும்பி எனக்கு இரண்டு தெரிவுகளைத் தந்திருந்தார். ஒன்று அரசியலை ஒழுங்காய்ப் பேசு; இல்லையெனில் அம்மாவுக்கு தோசை சுட உதவி செய் என்று. அன்பர் சொன்னதை சும்மா தட்டிக் கழிக்கமுடியாது. ‘மூலதனத்தை’ எல்லாம் கரைத்துக் குடித்தவர் சொன்னால் ஏதோ பெரும் பின்புலம் இருக்கத்தானே செய்யும்? எனவே இல்லாத என் மூளையைக் கசக்கத் தொடங்கினேன். புலம்பெயர் தேசமொன்றில் நான் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பற்கு எனக்கு அரசியல் பேசுவது அவசியமா? இல்லை தோசைக்கு மா கரைத்து ஊற்றுவது முக்கியமா? உயிர் வாழ்வதற்கு உணவே அவசியம் என்று மூன்றோ நான்காம் வகுப்பில் சுற்றாடல் கல்வியில் கற்பித்த ‘மனிதருக்கு அத்தியாவசியமானது உணவு உடை உறையுள்’ என்பது இன்னமும் எனக்குள் பதிவாயிருந்தது இந்த நேரத்தில் கைகொடுத்தது.

சரி, இப்படி ‘அன்பர்கள்’ பாராட்டு வழங்கும்போது என் மானம் ரோசம் பொங்கியெழுந்தல்லவா இருக்கவேண்டும்? மானம் ரோசம் வீரம் இல்லாது தமிழனாய் இருப்பதில் என்ன பயன்? இது போதாது என்று வைத்த புனைபெயரில் ‘தமிழன்’ என்றும் சேர்த்து வைத்தல்லவா படம் காட்டிக்கொண்டிருக்கின்றேன். திண்ணையிலோ பதிவுகளிலோ எனக்கு பரீட்சயமான ஒரு நண்பர் ‘தம்பி நீர் டிசே தமிழன் என்றால் நாங்கள் என்ன டிசே சிங்களவனா இல்லை டிசே ஆங்கிலேயானா?’ என்று கேட்டார். நான் சும்மா விடுவேனா என்ன? தமிழில் எழுதும்போது நான் டிசே தமிழன், சிங்களத்தில் எழுதும்போது டிசே சிங்களவன், ஆங்கிலத்தில் எழுதும்போது டிசே ஆங்கிலேயன் ஆவேன் என்றேன். அவரும் தான் ஊக்குவித்த பெடியன் நல்லாய்த்தான் ‘வளர்ந்துவிட்டான்’ என்று தலையிடித்துக் கொண்டிருப்பார் என்பது வேறு விடயம்.

இப்படி பதிவுகளில் சிலர் வசைக்கவிதை/பதிவுகள் எழுதிக்கூட ஏன் எனக்கு -பெண்களுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போல- ஆண்களுக்குரிய ‘குணங்கள்’ எதுவுமே ஊற்றெடுத்துக் கிளம்பவில்லை என்பதுதான் மிகுந்த கவலையாயிருந்தது. போற வாற இடமெல்லாம் சைட் அடிக்கின்ற ஸ்பானிய பெண்கள்தான் எனது தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்களோ என்ற அச்சமே எனக்குள் எழுந்தது. ஆனால் இந்த மானம் ரோசம் எனக்கிருப்பின் அது வளாகத்தில் இருந்தபோதே பொங்கியிருக்கவேண்டும். பரீட்சைகளின்போது குறைய மார்க்ஸ் கிடைக்கும்போதெல்லாம், என் படிப்பில் பிழையில்லை prof ன் பேனையில்தான் தவறு என்று பெருந்தன்மையாக நினைப்பவன் நான். ஏன் பாடங்களில் சித்திபெறத் தவறினால் கூட…. அந்தப் பாடத்தைப் பழிவாங்கவேண்டும் என்று சிரத்தையாக திருப்பப் படிக்காமல், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றுதான் நகர்ந்து போயிருக்கின்றேன். எனவே என் அடிப்படையில்தான் பிரச்சினை இருக்கின்றததே தவிர, எங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் அல்ல என்று இப்போது புரிகின்றது.

சரி எதற்கும் இருக்கட்டும்; அன்பர்கள் அளவுக்க்குமீறி ‘பாராட்டுப் பத்திரம்’ வாசிக்கும்போது நானும் திருப்ப அவர்களுக்கு பா.பாத்திரம் கொடுப்பதற்கு உசாத்துணையாக இருக்கட்டும் என்று சில புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். புத்தகங்களுக்கு ஓடர்செய்து பல மாதங்களாகியும் என் கைகளில் வந்து சேரவில்லை. கனடீய அரசாங்கம்தான் புத்தகங்களைத் தடை செய்து வைத்திருக்கின்றதோ என்ற ஜயம் வந்தது. கனடாவில் நாற்பதோ, ஜம்பதோ வருடங்களுக்கு முன் சின்னதாய்க் கட்டியமைக்கப்பட்ட கம்யூனிசக் கட்சியை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை செய்தது என்று எங்கையோ வாசித்திருந்தேன். அதுபோல் தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் - மார்க்ஸ், மாசேதுங், மல்கம் எக்ஸ், சேகுவேரா, காஸ்ரோ போன்றவர்களின் படங்களைப் பார்த்துவுடன் பதுக்கி வைத்துவிட்டாகளோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுங்கத்திலிருந்த( customs?) யாரோ ஒரு நல்ல மனிதர்தான், எங்கள் கனடீய பிரதம உறங்கிக்கொண்டிருக்க்கும்போது இரவோடு இரவாய் அனுப்பியிருக்கவேண்டும். கைகளில் புத்தகங்கள் கிடைத்துவிட்டன.

இப்படியாக இன்னும் பல கிளைக்கதைகள் உண்டெனினும்-உண்மையான- காரணங்கள் இரண்டே. பெரியாரைப் பாதிக்கின்ற எவரையும் மார்க்ஸும் பாதிக்கவே செய்வார். பெரியாரை விளங்கிக்கொள்கின்ற எவராலும் தலித்தியத்தையும் பின் நவீனத்துவத்தையும் இலகுவாய் அரவணைக்க முடியும். அந்த ஆர்வமே இவ்வாறான புத்தகங்களை வாங்கி வாசிக்கச் செய்தது.

இதைவிட இன்னொரு காரணம் உண்டு. தோழர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, பெரியாரைச் சிலாகித்த அளவுக்கு மார்க்ஸை சிலாகித்துப் பேசாதது அவருக்கு கவலை தந்திருக்கவேண்டும். அவர் இடதுசாரிப் பின்புலத்தில் வந்தவர். நான் பெரியாரை வியந்து கொண்டிருப்பதுபோல அவர் மார்க்ஸை வியந்துகொண்டிருப்பவர். பெரியாரைப் போலத்தான் மார்க்ஸும் சாதாரண மனிதர் என்று தெளிவுபடுத்தவோ என்னவோ மார்க்ஸ் எழுதிய காதற்கவிதைகளை எல்லாம் வாசிக்கத் தந்தார். ‘மார்க்ஸை எங்கோ எட்டாத தொலைவுக்கு துரத்திவிட்டார்கள் நமது மார்க்சிசவாதிகள்…’ என்றதற்கு ‘மார்க்ஸை நேர்மையாக அணுகினால் அவர் நெருக்கமாகிவிடுவார்’ என்றார். ‘நிச்சயமாய் மார்க்ஸ் மீது காழ்ப்புணர்வில்லை; இன்றைய உலக அரசியலின் சிக்கலான சூழ்நிலைக்குள் கடைசி நம்பிக்கையாய் இருப்பது மார்க்ஸியமே தவிர வேறு எதுவுமல்ல; ஆனால் மார்க்ஸை வைத்து கொண்டாடுபவர்களே மார்க்ஸை நெருங்கவிடாது செய்துவிட்டார்கள்’ என்றேன் (வசைக்கவிதை எழுதிய அன்பரும் யாரோ ஒரு எழுத்தாளரின் வாரிசு என்றுதான் பட்டமொன்று இறுதியில் தந்திருந்தவர்; தங்கள் மீதான விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ளாது வேறொருவருடன் சேர்த்து கழுவிலேற்றுபவர்களிடமிருந்து… எப்படி மார்க்ஸை கற்றுக்கொள்வதாம்?) மேலும் இணையத்துக்கு வந்ததன்பின் பெரியாரை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் தங்கமணி, ரோசாவசந்த் போல, மார்க்ஸை தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்க உபயோகிக்காது- மார்க்ஸை மார்க்ஸாக முன்வைத்து உரையாடியவர்களை இணணயத்தில் நான் இன்னும் காணவில்லை. அத்தோடு இவர்களிடமிருந்து மார்க்ஸை கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிய சிலர் இன்னும் மிகமோசமான முறையில் மார்க்ஸை அணுகியதையும். தங்களுக்குள் இருக்கும் வலதுசாரி/சாதீய முகங்களைக் காட்டியதையும் பார்த்து ‘தள்ளியிரும் பிள்ளாய்’ என்று விலத்தித்தான் வரமுடிந்தது (கோபம் வருமென்றாலும் ‘வறட்சியான மார்க்ஸியர்கள்’ என்றுதான் அவர்களை அழைக்கமுடியும்).

மேலைத்தேய தத்துவாசிரியர்களை/ஆய்வாளர்களை எல்லாம் போகின்றபோக்கில் உதிர்த்துவிட்டு செல்லும் இவர்கள் எத்தகைதூரம் அந்த ஆய்வாளர்கள் கூறியதை உள்வாங்கிக்கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதே. Noam Chomskyயை -சொற்பமாய்- வாசித்தவளவில் அவர் விவாதித்த தேசியவாதம்/தேசிய இனங்களின் பிரச்சினையைக் கூட - ஈழ இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள்- உள்வாங்கி தமிழில் விவாதித்தமாதிரி காணக்கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். பல்வேறு இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் பல இயக்கங்கள் சோசலிச சமதர்மமே முடிவான தீர்வு என்று ஈழத்தில் கூறிக்கொண்டிருந்தார்களாம். விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று….? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் (அவரோடு இயங்கிய தோழர் ஒருவர்தான் கூறியது). இத்தனைக்கும் விசுவின் பாதிப்பில்தான் எஸ்.வி.ஆரோ அல்லது அ.மார்க்ஸோ அரசியல் எழுத்து இயக்கத்துக்கு வந்தவர்கள் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன். உடனே விசுவானந்ததேவன் இப்படிக்கூறிவிட்டார் எனவே அவர் கம்யூனிச துரோகி என்று அவரது காணாமற்போன உடலை கடலிலிருந்து கண்டுபிடித்து முத்திரை குத்தாதிருப்பார்களாக….!

இவற்றை ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்….? வேறு ஒன்றுமில்லை, மீண்டும் சனி பிடித்துவிட்டது. அவ்வளவுதான்.

இனி இன்னும் இரண்டு பதிவுகள், நான்கு வசைக்கவிதைகள் பறந்து வரும். புன்னகைத்தபடியே, மார்க்ஸை மார்க்ஸின் பார்வையினூடாக மட்டும் பார் என்கின்ற தோழருடன் விவாதித்தபடி, வந்திருக்கும் புத்தகங்களை ஆறவமர வாசிக்கவேண்டியதுதான்.

நியூ புக்லாண்டிலிருந்து வந்து சேர்ந்த புத்தகங்கள்:

 

book2

(1) மார்க்சியத்துக்கு அழிவில்லை - ஞானி
(2) மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை - ஜோர்ஜ் தொம்ஸன் (தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்)
(3) அழகும் உண்மையும்: மார்க்ஸிசப் பார்வை- ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் (தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
(4) அ.அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கெளதமன்
(5) ஆட்சியில் இந்துத்துவம் - அ.மார்க்ஸ்
(6) மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
(7) தலித்தியமும் உலக முதலாளித்துவமும் - எஸ்.வி.ராஜதுரை
(8) குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா -தமிழாக்கம்: அமரந்தா
(9) இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு - அ.மார்க்ஸ்
(10) இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.B.R.அம்பேத்கார் (தமிழில்:செங்கோபன்)
(11) ஆகஸ்ட் 15: துக்கநாள் -இன்பநாள் - பெரியார், அண்ணா, கேசரி (தொகுப்பு:எஸ்.வி.ராஜதுரை)
(12) ஆதி சங்கரரின் மக்கள் விரோத கருத்துக்கள் - பகவான்
(13) கற்பிதங்களின் தேசம் - குமரன்தாஸ்
(14) இந்து இந்தியா: அக்ரனியிலிருந்து அத்வானிவரை - எஸ்.வி.ராஜதுரை
(15) மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ரா.கிருஸ்ணய்யா
(16) இந்தியத் தத்துவங்களின் அரசியல்- ந.முத்துமோகன்
(17) காந்திய அரசியல் - வ.கீதா
(18) பூர்தியாவும் மார்க்சிசமும் - எஸ்.வி.ராஜதுரை
(19) புத்தர் சிரித்தார் - பாமரன்
(20) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

December 4, 2006

பாதித்தது….!

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 4:20 pm

சில மாதங்களுக்கு முன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரேசிலிய இளம்பெண் தனது அனுபவங்களை டயரிக்குறிப்புக்களாய் எழுதி அது புத்தகமாக்கப்பட்டு சர்ச்சைக்குரியதாயிருக்கின்றது என்று வந்திருந்த பத்திரிகை குறிப்பை கத்தரித்து வைத்திருந்தேன். Portuguese மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு அடுத்த வருடம் பெப்ரவரி வரை காத்திருக்க வேண்டும்.

இவ்வாறான நூல்களை முழுமையாக வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் உண்டெனினும், வாங்கவேண்டிய புத்தகங்களின் வரிசையில் இதையும் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஏற்கனவே Hip-Hop, R&B பாடல்களுக்கு வீடியோவில் பின்னணி ஆடும் ஒரு பெண் எழுதிய சுயசரிதையை (Confessions of a Video Vixen) வாசிக்கத்தொடங்கி இடைநடுவில் நிறுத்தியிருந்தேன். உடலுறவு என்பது குறித்த புரிதல் இல்லாமலே பதினமத்தின் ஆரம்பத்தில் எப்படி அவர் புணர்ச்சியிற்கு -குழுவாய்- ஆளாக்கப்பட்டார் என்பதை விபரித்ததை வாசித்தபின் -அதற்கு மேல் தொடர்ந்து வாசிக்கமுடியாது- என்ற மன அவதியில் இடையிலேயே மூடி வைத்துவிட்டேன்.

இன்று பிரபலமாய் இருக்கும் ராப் பாடகர்கள் பலரின் -நமக்குத் தெரியாத இன்னொரு பக்கம்- பற்றி அதில் நிறைய எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முக்கியமாய் தன்னைப் போல ராப் கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீட்டை விட்டு ஓடிவரும் இளம்பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்பதற்கும், வெளியே தெரியும் வர்ணவெளிச்சங்கள் மட்டுமில்லை, நாமறியாத/நாம் நினைத்தே பார்க்கமுடியாத இருட்டுப் பக்கங்களும் ராப்பில் இருக்கின்றன என்பதை பெண்களுக்கு தெரியப்படுத்தவுமே… தான் இந்தச் சுயசரிதையை எழுதியதாக அந்தப்பெண் நூலின் அறிமுகக்குறிப்பில் எழுதியிருந்தார். அதேவேளை கடந்துவந்த பாதையை அசிங்கம்/இழிவு என்று பார்க்காமல் அந்தந்தப்பொழுதுகளில் தனக்குப் பிடித்ததைச் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தனது தவறுகளையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நூலை -நான் வாசித்த அளவு வரை- வளர்த்துச் சென்றிருந்தார்.

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் என்று ஏற்கனவே வாசித்திருந்தேன். இப்போது அந்நூலுக்கு அ. முத்துக்கிருஷ்ணன் நல்லதொரு திறனாய்வு செய்திருந்தது கண்ணில்பட்டது. கீற்றுத் தளத்திலிருந்து நன்றியுடன் இங்கே பதிகின்றேன்..

நிர்வாணத்தின் நிழலும் மனமும்
-அ. முத்துக்கிருஷ்ணன்

ஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தை பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ருபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழிலாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்த புத்தகம் Fictionல் என்.எஸ்.மாதவன் மற்றும் Non-Fictionல் எம்.பி.பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது)

கணவனின் மரணத்துக்கு பிறகு தனது மாமியார் ஜமீலாவின் குழந்தைகளை பராமரிக்க தினமும் ஐந்து ரூபாய் கேட்கிறார். அது வரையில் ஜமீலா வேலை பார்த்த தட்டோடு நிறுவனத்தில் பெற்ற தினக்கூலி ரூ.4.50. கணவரின் மரணம் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தும் முதலாளி கைகளை விரித்து விட்டார். வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாக தனது நண்பர் அறிமுகப்படுத்திய ரோசிச்சேச்சியை நாடுகிறார். அன்றைய இரவை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால் ஐம்பது ரூபாய் தருவதாக ரோசிச்சேச்சி கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஜமீலா மனதில் தோன்றியது - அடுத்த பத்து நாட்களுக்கு தனது குழந்தைகள் நிம்மதியாக பசியாறும் என்பது மட்டுமே. உடனடியாக சம்மதித்து ரோசிச்சேச்சியுடன் திருச்சூரிலுள்ள ராமா நிலையத்துக்கு சென்றார். ராமா நிலையம் திருச்சூரிலுள்ள அரசாங்கத்தின் தங்கும் விடுதி. அங்கு தான் கேரளாவின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கடி தங்குவார்கள்.

அன்று அந்த அறையில் இருந்தது மூத்த காவல்துறை அதிகாரி. பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரிவுச்சார விழா பரிசாக ஜமீலாவை வரவழைத்திருந்தனர் அவருடைய சக அதிகாரிகள். அந்த நபர் ஆடைகளை களைய சொன்னதும் ஜமீலா சம்மதிக்க மறுத்தார், எப்படியோ ரோசிச்சேச்சி தலையிட்டு ஜமீலா தொழிலுக்கு புதுசு என விளக்கி அவரை சமாதானப்படுத்தினார். அந்த தகவல் காவல் துறை அதிகாரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு பிறகு அவருடைய ஓட்டுநர் ஜமீலாவை நிர்பந்தித்தார். இரவு பேருந்து வசதிகள் வல்லாததால் ராமா நிலையத்திலேயே இருவரும் தங்கிவிட்டார்கள்.

விடியல் புதிய அனுபவங்களை தந்தது - அன்று இந்த தொழிலின் பாலப்பாடத்தை கற்றுக் கொண்டார் ஜமீலா. ரோசிச்சேச்சியையும், ஜமீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஜமீலா அடித்து துன்புறுத்தப்பட்டார். இந்த செயல் பின்நாட்களில் வாடிக்கையானது. வாடிக்கையாளர் இல்லாமல் இந்த தொழில் இயங்காது. உடலுறவு கொள்ள பணத்துடன் வருபவர் அவரே. எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரை பாதுகாக்கும் கடமையை காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டாளரை அரசு பாதுகாப்பது இயல்பாகிப் போனது. பணத்தை எப்படியோ தன் மாமியாரிடம் சேர்த்து விட்டார் ஜமீலா. இந்த தகவல் வெளியே தெரிய வர அவர் குடியிருந்த பகுதியிலிருந்து துரத்தப்பட்டார். தொழிலுக்கு போன முதல் நாளே தனது வேலையையும் வீட்டையும் இழந்தார் ஜமீலா. குழந்தைகள் நிம்மதியாய் மாமியாரிடம் வளர்ந்தனர்.

பாலக்காடு மாவட்டத்திலுள்ள கம்பெனி வீடுகளில் பல காலமிருந்தார். அது மிகவும் பாதுகாப்பான இடம். பெரிய நிலப்பரப்பில் விஸ்தாரமான வீடுகள். அதை தரவாடு என்று அழைப்பார்கள். பெண்கள், காப்பாளர்கள் மற்றும் தரகர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். தரவாடுகளின் முன் பகுதியில் பல மாடுகள் கட்டிக் கிடக்கும். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அதுமாடுகள் வாங்கி விற்கும் இடம் போலவே காட்சியளிக்கும். விஷயம் அறிந்தவர்கள் அங்கு வந்து தரகர்களிடம் விலை பேசுவார்கள், தொகை திகைத்தால் அவர்கள் வீட்டினுள் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.

தன்னை இந்த தொழிலிருந்து விடுவித்து நிம்மதியான குடும்ப வாழ்க்கை நோக்கி சென்றிட பல முறை முயற்சித்தார் ஜமீலா. இருமுறை திருமணம் செய்தார். எந்த வாழ்வும் நிலைக்காமல் மீண்டும் தொழிலுக்கு வந்தார். மூன்றாவது திருமணம் 12 ஆண்டுகள் நீடித்தது. கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, தனது 17 வயது மகளுடன் நடுத்தெருவில் நின்றார். இந்த முறை தொழிலுக்கு செல்லும் பொழுது புதிய நிர்பந்தமாக தன் மகளின் அனுமதியை பெறுவதில் உணர்ந்தார் ஜமீலா. அனுமதி வாங்கும் வரை அந்த பகுதியிலிருந்த கோவில் மற்றும் மசூதியின் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுத்த குழந்தைகளை பராமரித்தார்.
பாலியல் தொழிலாளர் இயக்க பணிகளில் ஈடுபட்டார். கேரளாவிலுள்ள பிற சமூக-அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் சங்கம் பல பிரச்சனைகளுக்காக போராடியுள்ளது. அப்படியான பொது தளங்களில் புறக்கணிப்பும், அவமரியாதையுமே காத்திருந்தது. இந்த இயக்கத்தில் கேரளாவில் மட்டும் 8000 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

தாய்லாந்தில் நடந்த ஆவணப்பட பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஜமீலாவுக்கு கிட்டியது. அவருக்கு அங்கு பட்டரை முடிவில் வீடியோ காமிரா வழங்கப்பட்டது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் தொழிலாளரின் - ஒரு நாள் வாழ்வு என்ற ஜமீலாவின் முதல் ஆவணப்படம் 2003ல் வெளியானது. தற்சமயம் சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் பயணித்து பல கருத்தரங்குகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.

இந்த சமூகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்காக பேசம் குரல்களே இல்லை. அந்த தொழிலின் அவல நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்கிறார் ஜமீலா. இந்த மௌனத்தை தகர்க்கவே நான் ஒரு பாலியல் தொழிலாளி என உறக்க அறிவிக்கிறார். விஞ்ஞானி தனது மூளையின் சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்கிறார். ஆசிரியர் தனது வார்த்தை ஜாலங்களை, தொழியலாளர் தனது கரங்களை அது போலவே பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடம்பை. ஜமீலா தனது உள் உணர்வுகளை மிகத் தெளிந்த மொழியில் சுலபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். திருமணத்தின் போதாமை நிறைந்த வாழ்க்கையில் பெண்கள் சிறைப்பட்டு கிடக்கிறார்கள். தனது பிடிக்காத ஆணுடன் கட்டாயமாக வாழ் நிர்பந்திக்கச் செய்கிறது 95% குடும்ப வாழ்க்கை. அங்கே துன்பம், அவமானம், வன்கொடுமை, மற்றும் வீட்டு பலாத்காரம் நிரம்பிக் கிடக்கிறது என்கிறார்.

52 வயதாகும் நளினி ஜமீலா மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார். அவருடைய அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து எழுத்துப் பிரதியை எடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் கோபிநாத். ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

நளினி ஜமீலா பத்திரிகையாளர் சந்திப்புகளில் பல கேள்விகளை எதிர்கொள்கிறார். அவரிடம் எல்லா கேள்விகளுக்கு எந்த பயமோ, கூச்சமோ இல்லாமல் தெளிந்த பதில் காத்திருக்கிறது. தன் பெண் குழந்தை இஷ்டபட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் அதை தடுத்திருக்க மாட்டேன் என்றார் ஒருமுறை. 20 ஆண்டுகள் இந்த தொழில் ஜமீலாவை பொறுத்தவரை இயந்திரத்தனமான கலவியாகவே இருந்தது. மிகவும் அபூர்வமாகவே மனதுக்கு பிடித்த நபர்களை சந்தித்துள்ளார். ஜமீலாவை காதலித்த பலரை மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்பங்கள் நோக்கி அனுப்பி உள்ளார். ஜமீலாவின் மணம் சிலரிடம் அரூபமாக நெகிழ்ந்து, கசிந்துள்ளது.

பெரும்பகுதியானவர்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று திரும்பவேயில்லை. இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவித கொண்டாட்ட மனநிலையை வந்தடைந்துள்ளார். பல புதுவித அனுபவங்கள், புதிய வாடிக்கையாளர்கள். திருச்சூர் - திருவனந்தபுரம் மற்றும் கோச்சி - கோழிக்கோடிடையே செல்லும் ரயில்களில், குளிருட்டப்பட்ட பெட்டிகளில் சில வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டுடன் காத்திருக்கிறார்கள். ஜமீலாவுடன் தங்கள் மனச் சுமையை பகிர்ந்து கொள்ள மட்டுமே சிலர் அழைக்கிறார்கள். பலவிதமான ஆண்களை, வெம்பிக் கிடக்கும் மனங்களை, சந்தித்த ஜமீலா இந்த சமூகத்தில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை, ஆண்களின் மனங்களில் வெவ்வேறு விதமான பெண்களை சந்திக்கும் ஆவல் அடங்காது என்கிறார்.

சந்தை கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் இந்த உலகத்தில் பெண் போகப் பொருளாக ஒவ்வொரு நிமிடமும் நுகரப்படுகிறாள். சோப்புக் கட்டி முதல் வலை உயர்ந்த கார்கள் வரை பெண்ணின் சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியே வியாபாரம் நடக்கிறது. மாறும் கற்பு எனும் புனிதப் போரை நிகழ்த்த கலாச்சார போலிஸ்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிட்நைட் மசாலாவுக்கு விளம்பரதாரர்களை தேட மேலதிகாரிகள் உத்தரவின் பெயரில் எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் தெருக்களில் அலைகிறார்கள். சதை விற்பனையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் போட்டா போட்டி.

பாலியல் தொழில் பெண்ணின் ஒழுக்கம் தொடர்புடையதாக சமூக மனதில் பதிந்துள்ளது. இந்த தொழிலுக்கு வரும் ஆண் குற்றவாளியாகவோ, ஒழுக்கக்கேடானவனாகவே கருதப்படுவதில்லை. விடுதி அறையில் பிடிபடும் பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது. ஆண்களை தப்பித்தோட அனுமதிக்கிறது. நாம் என்றும் அழகன்கள் கைது என்ற செய்தி பத்திரிகைகளில் பார்த்ததில்லை. இது ஆண்களின் மேலாதிக்கத்தில் இயங்கும் சமூகம். சட்டம், அரசு, காவல்துறை, மதம் என எல்லா ஆண் படைத்தவை ஆணுக்காகவே படைத்தவை. இந்த நிலை நீடிக்கும்வரை ஆணுறை இல்லாமல் ஆண் அலையலாம்.

எல்லா ஊர்களில் இருக்கும் கோவில் நிர்வாக விடுதிகள் தான் மலிவு விலையில் கிடைக்குமாம் - அதில் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் விடுதி சிறந்தது, செல்போன்களின் வருகை தொழிலை லகுவாக்கி உள்ளது என்கிறார் ஜமீலா. பாலியல் தொழிலாளியாக உருமாறியிருக்காவிட்டால் சமூக சேவகராக, இயக்குனராக, எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்க முடியாது என்கிறார் சிரித்துக்கொண்டே. முன்பு என்னை தெருவில் நடக்கும் பொழுது தேவடியா மகள்னுதான் கூப்பிடுவாங்கள், இப்ப அப்படி இல்லை, இப்ப நான் நளினி ஜமீலா மகள் என்கிறார் பெருமிதத்துடன் ஜீனா.

பலவித நிறங்களோடு ஒவ்வொரு நாளும் ஜமீலாவுக்கு புதியதாய் விடிகிறது. வழக்கமான வாழ்வில் கசப்புகள், குரோதங்கள், சந்தோஷங்களுடன் பயணிக்கிறார் ஜமீலா. இருப்பினும் அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல் சலசலத்து ஓடுகிறது. என்னால் என் குழந்தைக்கு யார் தகப்பன் என தீர்மானிக்க இயலும். அவர் போலீஸ் அதிகாரியா அல்லது மாஜிஸ்ட்ரேடா என - ஜமீலா கூறிக்கொண்டே செல்லும் பொழுது குடும்பம், சமூகம், மதம் என எல்லா கட்டுமானங்களும் அதிர்வுற்று நிற்கின்றன.

December 1, 2006

அஸினுடனான கவித்துவமான உரையாடல்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:35 pm

இவ்வளவு காலமும் அஸினின் தீவிர இரசிகராய் இருக்கும் நான் அஸினை நேரில் சந்தித்தால் -அஸினுக்கு எனக்கும் இடையிலான உரையாடல் - எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். கவித்துவமாய்த்தான் உரையாடல் தெரிகிறது, கனவில்.

நிஜத்தில் என்னத்தால் எல்லாம் அடி/உதை வாங்குவேன் என்பதை தயவு செய்து எவரும் நினைவுபடுத்திவிடாதீர்கள்.

Asin’s Fan:
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா..
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா..
வார்த்தைவரக் காத்திருக்கும் கவிஞனில்லையா..
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா..
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

Asin
சாரல் மழைபோல் விழுந்துவிட்டாய்
வேர்கள் முழுதும் நனைத்து விட்டாய்
மழையாயிருந்த எனது மனசில்
விதையாய் விழுந்து முளைத்து விட்டாய்

என் பொக்கிஷங்கள் திருடிவிட்டாய்
பூவின் காற்றாய் வருடிவிட்டாய்

வாழை இலைபோல் மறைந்திருந்தேன்
காற்றாய் நுழைந்து கிழித்து விட்டாய்
அரசம் இலைபோல் துளிர்த்திருந்தேன்
உயிரை உயிரால் உழுதுவிட்டாய்

asin98

Asin’s Fan:
பூங்காற்றிலே உன் சுவாசத்தைத்
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப்பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

காற்றின் அலைவரிசை கேட்கிறதா
கேட்கும் பாட்டிலொரு
உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகுமொரு வாசம் வருகிறதா……

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை…
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை…

Asin:
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

உந்தன் அலாதி அன்பினில்
நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்

தூக்கம் வருகையில்
கண்பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதுந்தன் முகமே

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்

Asin’s Fan:
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும்போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும்போது….

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயோ
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயோ

கடலின் அடியில் பளிங்காய் இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தே கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீதானா வழிந்தோடினாய்

Asin:
குழந்தையைப்போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் நடக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர்
காற்றாடியாகிறேன்

வெள்ளிக்கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
மீண்டும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்

மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கரைகிறாய்

asin111

Asin’s Fan:
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு….

உன்னோடு நான் கொண்ட பந்தம்
மண்ணோடு மழைகொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்…

Asin:
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில்
தூங்கினால் போதும்

அதேகணம்
என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவாலே நான்

அடைமழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்நேகம்
ஒரு போர்வைக்குள்
இரு தூக்கம்

குளுகுளு பொய்கள் சொல்லி
எனை வெல்வாய்
அது தெரிந்தும்கூட அன்பே
மனம் அதையே தான் எதிர்பார்க்கும்

திருடன் போல்
பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீயணைப்பாயே
அது கவிதை

ம்….இவ்வளவு காலமும் ‘கவிதை’ என்று எழுதியதை அவையெல்லாம் கவிதைகளல்ல என்று ஒரு வரியில் அஸின் புரட்டிப்போட்டுவிட்டாரே என்று கோபம் வந்தாலும், சொன்னது அஸினாயிற்றே என்றபடியால் அமைதியாகிவிட்டேன் :-).

குறிப்பு: பாவனாவின் படங்கள் போட்டு ஒரு உருப்படியான பதிவு எழுதினனீ, நெடுங்கால இரசிகராய் இருக்கும் நீ எனக்கு எதுவும் எழுதாது இருப்பது நியாயமா என்று அஸின் என்னை நாளை திட்டாமல் இருப்பதற்காய் முற்கூட்டிய கவனத்துடன் ஆனான பதிவு இது!

Next Page »

Powered by WordPress