தமிழ் முகாங்கள் - NY Times, Editorial
தமிழ்ப்புலி கெரில்லாக்களை வெற்றி கொண்டதாய் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னும், இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை இன்னமும் ‘நலன்புரி கிராமங்கள்’ எனப்படும், ஆனால் கிட்டத்தட்ட இராணுவ விசாரணை முகாங்களாய்த் தெரிகின்ற இடங்களில் தங்கவைத்திருக்கின்றது.
மிகவும் கோரமான போரின் இறுதிக்கட்டத்தில் கெரில்லாக்களால் பயணக்கைதிகளாக்கப்பட்ட இங்கிருக்கும் மக்களில் அநேகர், முகாங்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவோ, மனித உரிமை நிறுவனங்களாலோ அல்லது பத்திரிகையாளராலோ அணுகவோ முடியாது இருக்கிறார்கள்.
அரசாங்கம், இங்கிருக்கும் அகதிகளிலிருந்து தமிழ்ப் புலிகளைத் தாங்கள் பிரித்தறிந்துவிட்டும், தமிழ்க் கிராமங்களிலுள்ள மிதிவெடிகளை அகற்றியபின்னும் மக்களை (அவர்களின் சொந்த இடங்களுக்கு) திரும்பிச் செல்ல அனுமதிப்பார்களெனக் கூறுகின்றது. இங்கிருக்கும் மக்களுக்குள் முன்னாள் கெரில்லாக்கள் பதுங்கியிருக்கக் கூடும். தமிழ்ப் புலிகள் தமிழ் மக்களை எவ்விதப் பெறுமதியும் இல்லாது பாவித்திருக்கின்றார்கள் என்பதிலும், ஆண்களையும் குழந்தைகளையும் பலவந்தமாய் தங்கள் இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றார்கள் என்பதிலும் எத்தகைய அறமும் இருக்கவில்லை. ஆனால் இங்கிருப்பவர்களை விசாரணை செய்யும் முறை நீண்டகாலத்திற்கு இழுத்தடித்துக்கொண்டே செல்கின்றது. அநேக அகதிகள் இதை தமிழ்ச் சிறுபான்மையினருக்கு எதிரான இன்னொருவகையான துஷ்பிரயோகமாகவே பார்க்கின்றனர். ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி, நியூயோர்க் ரைம்ஸின் லிடியா போல்கிறினுக்கு கூறுகின்றபோது, “இது எதிர்காலத்தில் இன்னொருவகையான பிரச்சினைக்கு எளிதாக வழிவகுக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா, தமிழர்களின் மீள்சீரமைப்பை உண்மையில் விரும்புகின்றார் என்றால், அவர் இப்போதே இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.
முகாங்களிலுள்ளவர்களை சந்திப்பதை அரசாங்கம் கடுமையாயாய்க் கட்டுப்படுத்துவதைப் பார்க்கும்போது, இது போரின் கடைசிமாதங்களில் அரசால் நடத்தப்பட்டதாய் நம்பப்படுகின்ற துஷ்பிரயோகங்களுக்கான விசாரணைகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் போன்ற சந்தேகத்தையே எழுப்புகின்றது. இராணுவம், புலிகளை மிக ஒடுங்கிய கடற்கரையோரமாக சுற்றிவளைத்தபோது, ஆயிரக்கணக்கான மக்களும் அகப்பட்டிருந்தார்கள்; மனித உரிமை நிறுவனங்களின் கூற்றுப்படி, தொடர்ச்சியாக இங்கே எறிகணைகள் வீசப்பட்டிருக்கின்றன. ஜ.நா சபை, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றது, ஆனால் எப்படி, யாரால் என்கின்ற கேள்விகள், சுயாதீன விசாரணைகள் இல்லாததால் இருண்மையாகவே இருக்கின்றது.
உதவி வழங்கும் நாடுகள் -ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய சபை, ஜப்பான் - மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உணவு, உறைவிடம் மற்றும் உடைகளை முகாங்களிலுள்ள மக்களுக்கு வழங்கி உதவி செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் அநேகர் தமிழர்களின் நிலை குறித்து இதுவரை மவுனமே சாதிக்கின்றனர், எனெனில் இவர்கள் இங்குள்ள (முகாங்களின்) நிலைமைகளை விமர்சித்தால் தாங்கள் முகாங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்களென அஞ்சுகின்றார்கள். அமைதியாக இருப்பதற்கான காலம் முடிகின்றது. தமிழர்களுக்கு உதவுவதற்கான மிகச்சிறந்த வழி, அவர்களுக்கான சுதந்திரத்தை வேண்டுவதும், இந்த நீண்ட விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும் தான்.
Thanks: NY Times (Jul 15, 2009)
தமிழாக்கம்: டிசே